கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாடே முடங்கி இருக்கும் இச்சூழலில், கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
அவ்வாறு கொரோனாவுக்கு எதிரான போரில் சேவையாற்றி வரும் மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று பட்டுக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
பட்டுக்கோட்டை ஓவியர் சங்கம் சார்பாக மணிக்கூண்டு அருகே சாலையில் வரையப்பட்ட ஓவியம் முன்னிலையில் காவல்துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள், நகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், ஓவியர்கள் என பலர் கொரோனாவை ஒழிப்போம் என உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.