தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலமாக நீடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற சஸ்பென்ஸை ஒருவழியாக கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று முடித்து வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். காலம் முதலே ரஜினிகாந்தின் அரசியல் வருகை பேசுபொருளாக இருந்து வருகிறது. 1990களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் வருகை என்பது விவாதத்துக்குரியதானது.
1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியே உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. காக்கா உட்கார பனம்பழ விழுந்த கதையாக ஜெயலலிதா எதிர்ப்பு ஜோதியில் இணைந்து ரஜினிகாந்தும் வாய்ஸ் கொடுக்க ஒர்க் அவுட் ஆனது.
உடனே ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்ததால்தான் திமுக-தமாகா கூட்டணி ஜெயித்தது என மகுடம் சூட்டப்பட்டது. அந்த தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட சொன்னார் ரஜினி; பாமகவை எதிர்த்து ஓட்டுப் போட சொன்னார் ரஜினி.. எதுவும் ஒர்க் அவுட் ஆகல, நோஸ் கட்டாகத்தான் முடிந்தது.
எந்த ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதுன்னு ரஜினிகாந்த் சொன்னாரோ அதே ஜெயலலிதாவை பின்னாளில் ஆதரிக்கவும் ரஜினிகாந்த் தயங்கவும் இல்லை. அதுமட்டுமி ஊழல் வழக்கில் ஜெயிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப் பாராட்டுப் பத்திரமும் வாசித்தவர் ரஜினிகாந்த்.
என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்வேன் என்ற டயலாக்கை பலமுறை கூறிய ரஜினிகாந்த், தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் தயவு தாட்சண்யமே இல்லாமல் எதிர்நிலைப்பாடு எதிர்த்தார். அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை நியாயப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு மக்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.
இப்படியே பேசிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென கட்சி தொடங்குவேன்; தேர்தலில் போட்டியிடுவோம்; எம்ஜிஆர் ஆட்சி தருவோம் என்றார். ஆனால் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் ரஜினிகாந்த் எதையும் செய்யவில்லை. ரஜினியின் குணமே பின்வாங்கிப் பதுங்குவது என்பதால் அவர் நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடமாட்டே என்றே அத்தனை பேரும் ஆரூடம் கூறினர். ஆனாலும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கிவிடுவேன் என கடைசி நம்பிக்கையையும் விதைத்திருந்தார் ரஜினிகாந்த்.
இந்த சூழலில்தான் கொரோனா பெருந்தொற்று காரணமாக ரஜினி நடித்த அண்ணாத்தே படப்பிடிப்பு ரத்தானது. ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை என்கிற போதும் அதற்கான சூழ்நிலையை அவர் உருவாக்கிவிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிதனர். இதனடிப்படையில் இப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என முடிவாக திட்டவட்டமாக அறிவித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டும்விட்டார்.
தமிழக அரசியல் களத்தில் 30 ஆண்டுகாலமாக ரஜினிகாந்தை முன்வைத்து நீடித்து வந்த சஸ்பென்ஸை கொரோனா எனும் பெருந்தொற்று நோய் வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளது.
Source : One India Tamil