அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால் கடந்த 4ம் தேதி நடந்த துணை தலைவருக்கான மறைமுக தேர்தலில் திடீரென போட்டியிட்ட திமுக அதிருப்தி நகர செயலாளர் இராம.குணசேகரன், 20 வாக்குகளை பெற்று கூட்டணி தர்மத்தை மீறி வெற்றிபெற்றார். இதனிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறிப்பெற்ற பதவியை இராம.குணசேகரன் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் செய்யவில்லை.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 19வது வார்டு உறுப்பினரும் கோட்டூரார் ஹாஜா மைதீனின் மனைவியுமான தில்நவாஸ் பேகம் வெளியிட்டிருக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த ஆடியோவில் “துணை தலைவர் தேர்தலில் போட்டியிட கூடிய தன்னை முன்மொழிய கூட திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் தயாராக இல்லை.
எனது வேட்பு மனுவை பூர்த்தி செய்ய நகராட்சி ஊழியர்களை உதவி செய்யவிடாமல் தடுத்தனர். வெளியில் காத்திருக்கும் எனது கணவரையும் சந்திக்க கூடாது என திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூறினர். இருப்பினும் எனது கணவரை வெளியில் சென்று சந்திக்க நகராட்சி ஆணையர் அனுமதித்தார். இதேபோல் திமுக அதிருப்தி கவுன்சிலர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்திருந்தால் என்ன செய்வார்கள்?. ஒரு பெண் என்றும் பாராமல் என்னிடம் திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் நடந்துக்கொண்ட விதம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த காயத்திற்கு மருந்து துணை தலைவர் பதவியை தனக்கு தருவது தான் ” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிரை தில்நவாஸ் பேகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியாயம் வழங்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.