தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் கழிவுநீர்வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிபுரக்கரை, நரசிங்கபுரம், மழவேனிற்காடு ஆகிய கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிரை நகரின் வளர்ச்சி திட்டங்கள் மந்தமடைந்து முடங்கும் சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி அதிரையின் பூர்வகுடி மக்கள் தங்களது அரசியல் பிரதிநிதிதுவத்தையும் இழக்க நேரிடும்.
இந்நிலையில் அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பிற்பகல் 2மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து அரசியல், இயக்கங்கள் சார்பில் மனு அளிக்க உள்ளனர். இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நகராட்சியுடன் கிராமங்கள் இணைக்கப்படும் பட்சத்தில் கிராம மக்கள் பெற்றுவர கூடிய 100 நாள் வேலை திட்டம், விவசாய கடன், வரி சலுகை உள்ளிட்ட ஒன்றிய மாநில அரசு சலுகைகளை கிராமவாசிகள் இனி பெற முடியாத சூழல் உருவாகும். அதுமட்டுமின்றி அவர்தம் கிராமங்களின் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய அரசியல் பிரதிநிதித்துவமும் கிராமவாசிகளிடம் இருந்து பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.