தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முறையான சாலை, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே வார்டு மறுவரையறையில் குளறுபடிகள் செய்து இஸ்லாமியர்களின் பிரதிநிதிதுவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தசூழலில் முழுமையாக வளர்ச்சிபெறாத அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களான ஏரிபுறக்கரை, மழவேனிற்காடு மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சிகளை இணைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நாளை திங்கள்கிழமை மாலை நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் அதிரை அரசியலில் இஸ்லாமியர்கள் மெஜாரிட்டி பிரதிநிதிதுவத்தை இழக்கும் அபாயம் உருவாகி இருப்பதுடன் அடுத்த நகராட்சி தலைவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் வர வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.