அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் – ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகள், ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தஞ்சை தொகுதி எம்பி முரசொலியும் நாடாளுமன்றத்தில் நிறுத்தம் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தாம்பரம் – ராமேஸ்வரம் விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் அதிராம்பட்டினம் 26/01/2026 முதல் 1 நிமிடம் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் நிறுத்தம் அறிவிப்பிற்கு பிறகு நேற்று முன்தினம் முதன் முதலாக அதிராம்பட்டினம் வருகை தந்த ராமேஸ்வரம் – தாம்பரம் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கம், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுசமயம் ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ரயிலில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல நாள் கோரிக்கையான தாம்பரம் – ராமேஸ்வரம் ரயிலுக்கு நிறுத்தம் கிடைத்த நிலையில், அந்த ரயிலை வரவேற்க மக்கள் திரண்டதால், அதிராம்பட்டினம் ரயில் நிலையமே நேற்று முன்தினம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிறுத்தம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் இம்மார்க்கத்தில் இயங்கும் மற்றொரு ரயிலான செங்கோட்டை – தாம்பரம் ரயிலுக்கும் அதிராம்பட்டினம் நிறுத்தம் பெற தொடர்ந்து வலியுறுத்த வேண்டியது நம் முன் இருக்கும் அடுத்த இலக்காகும்.
இந்த சிறப்பான நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ரயில் ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தாம்பரம் – ராமேஸ்வரம் ரயில்(16103) : அதிராம்பட்டினம் நிற்கும் நேரம் – இரவு 12.33 மணி
ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில்(16104) : அதிராம்பட்டினம் நிற்கும் நேரம் – இரவு 8:17 மணி











