பட்டுக்கோட்டை:
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி, திமுகவில் விருப்பமனு அளித்திருப்பவர்களின் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. அந்த வரிசையில், அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான அஸ்லம், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.
கட்சி விசுவாசம் மற்றும் தொடர் முயற்சி
அஸ்லம் கட்சியின் மீது கொண்ட தீவிர பற்றின் காரணமாக, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாய்ப்பு வழங்கப்பட்டால் மக்களின் பேராதரவுடன் சிறப்பாகச் செயல்படுவேன். ஒருவேளை கட்சி தலைமை வேறு ஒருவருக்கு வாய்ப்பளித்தால், தலைமை அறிவுறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்கு எவ்வித வருத்தமுமின்றி அயராது உழைப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த கட்சி விசுவாசமும், கட்டுப்பாடும் தொண்டர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
தற்போது மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பட்டுக்கோட்டை தொகுதிக்காக அவர் தனது விருப்பமனுவை அளித்துள்ளது, அவர் களத்தில் வலுவாக நிற்கிறார் என்பதைக் காட்டுகிறது.
“முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்”
தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்லம், கட்சி தலைமை தனக்கு வாய்ப்பளித்தால், பட்டுக்கோட்டை தொகுதியை மாநிலத்திலேயே ஒரு ‘முன்மாதிரித் தொகுதியாக’ (Model Constituency) மாற்றுவதே தனது முதன்மையான இலக்கு என உறுதியளித்தார்.








