பயணிகளின் முன்பதிவுக்கு ஏற்ப மாறும் டைனமிக் கட்டணம் முறையை மறுபரிசீலனை செய்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ரயில்களில் முன்பதிவு அதிகமாகும்போது, அதற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கும் டைனமிக் முறை, ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க உதவுவதாக தெரிவித்தார்.
மேலும், டைனமிக் முறையால் ரயில்வேக்கு வருமானம் அதிகரித்தாலும்,பண்டிகையல்லாத காலங்களில் பயணிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அவர், கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தற்போது, ரயில்வேயில் 100 ஆண்டு பழமையான சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், விரைவில் சிக்னல்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.