அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை, அதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியன இணைந்து இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தை நடத்தினர்.
பிரச்சாரத்திற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பேரா. கா.செய்யது அகமது கபீர் முன்னிலை வகித்தார். செயலாளர் எம்.எப். முஹம்மது சலீம் வரவேற்புரையாற்றினார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கி. அன்பரசம் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசும்போது, `கஜா புயலினால் சேதமடைந்த இரும்பு தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், பாட்டில்கள், கொட்டாங்குச்சிகள் ஆகியவை வீடுகள், வழிபாட்டுதளங்கள், வர்த்தக நிறுவனங்கள், காலி மனைகள் போன்ற இடங்களில் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. தற்சமயம் பெய்து வரும் மழை நீர் இவைகளில் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருக்கின்றன. எனவே டெங்கு காய்ச்சல் நமது பகுதியில் பரவாமல் இருக்க பொதுமக்கள், தன்னார்வ தொண்டர்கள், வர்த்தக நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து தங்கள் இடங்களில் உள்ள இப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், முறையாக மருத்துவம் பயின்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டும்’ என்றார்.
இப்பிரச்சாரத்தில் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுற்றுச்சூழல் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் எஸ். அகமது அனஸ், என். சேக்தம்பி, கே. சைபுதீன், தூய்மை தூதுவர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் சுற்றுச்சூழல் மன்ற தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பேரா. முஹம்மது இத்ரீஸ் நன்றி கூறினார்.