டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர் வி.பி. கலைராஜன்.
தி. நகர் முன்னாள் எம்எல்ஏ வான இவர் அதிமுகவில் மாநில மாணவரணி செயலாளராகவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது டிடிவி. தினகரன் அணியில் இருந்து செயலாற்றி வந்தார்.
இந்நிலையில் வி.பி. கலைராஜனை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகவும், அவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், தென் சென்னை வடக்கு மாவட்ட புதிய செயலாளராக சுகுமார் பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த வி.பி. கலைராஜன், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். ஏற்கனவே டிடிவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.