இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்தவர்களின் மாநிலத்தில் கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
தற்போது கேரளாவில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. காசர்கோட்டில் இன்று மட்டும் 19 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் ஐந்து பேருக்கு, பத்தினம்திட்டாவில் ஒருவருக்கு, எர்ணாகுளத்தில் 2 பேருக்கு, திருச்சூரில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரையும் தீவிரமாக கேரளா சுகாதார துறை கண்காணித்து வருகிறது. இவர்கள் தொடர்பு கொண்ட நபர்களையும் கேரளா அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கேரளாவில் காசர்கோட்தில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அங்கு கொரோனா ஏற்பட்ட 45 வயது பயணி ஒருவர்தான் காரணம் என்று கூறுகிறார்கள். தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த இவர் கடந்த 11ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தார். இவருக்கு 19ம் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த இவர் நிறைய நகை கடைகளுக்கு சென்றுள்ளார். தன்னுடைய உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளார். திருமணம் ஒன்றுக்கு சென்று இருக்கிறார். 3000க்கும் அதிகமான நபர்களை சந்தித்துள்ளார். பல்வேறு கடத்தல் கும்பல்களை சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இதனால் அவர் தான் சந்தித்த நபர்கள் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவில்லை.
தான் யாரை பார்த்தேன், எங்கே சென்றேன் என்பதை எல்லாம் இவர் மறைத்து இருக்கிறார். சக கடத்தல்காரர்களை காட்டி கொடுக்க முடியாது என்பதால் இவர் உண்மைகளை மறைத்து உள்ளார். இதனால் அவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட நபர்களுக்கு இப்போது வரிசையாக கொரோனா ஏற்பட்டுள்ளது.
இவர் இன்னும் பலர் தொடர்பு கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த கடத்தல் ஆசாமி உண்மையை இன்னும் சொல்லாமல் தவிர்த்து வருகிறார். இதனால்தான் கேரளாவின் கொரோனா தீவிரமாகி வருகிறது. முக்கியமாக காசர்கோடு மாவட்டத்தில் தீவிரமாக கொரோனா பரவி வருகிறது. கேரளாவில் கவனிக்க வேண்டிய விஷயம் அங்கு 25 பேருக்கு மட்டும்தான் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் எல்லாம் அவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.