உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தன் கோரமுகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”யாராவது ஒரு நிமிடம் மூச்சு விட முடியுமானால், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என அர்த்தம்.
இது தவிர, உங்கள் நாசி வழியாக கடுகு எண்ணெயை வைத்தால், உங்கள் வயிற்றில் பாய்ந்து அங்குள்ள அமிலங்கள் காரணமாக கொரோனா வைரஸ் இறந்துவிடும்” என பகீர் என்று பேசியுள்ளார்.
உலக சுகாதார மையமும், உலக நாடுகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுப்பிடிக்க திணறும்வேளையில், இவர் எந்தவித ஒரு அறிவியல் ஆராய்ச்சியுமின்றி, மருத்துவ பரிசோதனை செய்யப்படாத ஒரு தகவலைக் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதைப்போல் பேசுகிறார்.
இவரின் இந்த பேச்சு மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகா மூலம் கொரோனா தொற்று குணமடையாது என மருத்துவத்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் மக்களைக் குழப்பும் வகையில் பொய்யான தகவலை பரப்பும் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.