இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தன்னை சந்தித்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அமித் ஷா அறிவுரை வழங்கி உள்ளார்.
தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது. மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது.
நான் நலமுடன் இருக்கிறேன், மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன் என்று அமித் ஷா இந்தியில் டிவிட் செய்துள்ளார்.
கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பொய்யான செய்திகள் வெளியானது. அப்போது இந்த வதந்திகளை அமித் ஷா மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.