கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6ஆம் தேதி கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் வீணா விஜயனின் கணவர் முகமது ரியாஸுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. சட்டசபைத் தேர்தலில் பேபூர் தொகுதியில் ரியாஸ் போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவு அன்று இருவரும் பாதுகாப்பு உடை அணிந்துவந்து வாக்களித்தனர்.
இந்நிலையில் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்ணூரில் உள்ள இல்லத்தில் பினராயி விஜயன் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் பினராயி விஜயனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மத்திய அரசின் அறிக்கையின்படி, கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் முதல் 5 மாநிலங்களில் கேரளா 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.