அதிரை நகராட்சி எல்லையில் உள்ள வீடுகள், காலி மனைகளுக்கான வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பான நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக, SDPI, பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை உறுப்பினர்கள் இந்த வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக சொத்து வரி உயர்வுக்கு எதிராக SDPI 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் கையில் பதாகை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தார்.
இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரசிடம் பேசிய பெனாசிரா அஜாருதீன், கொரோனா பேரீடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்த அதிரை மக்கள் தற்போது தான் மெல்ல மீண்டு வருவதாக கூறினார். இதையெல்லாம் பற்றி கவலைப்படாத அதிரை திமுக கவுன்சிலர்கள், அநியாய சொத்து வரி உயர்வுக்கு ஆதரவாக செயல்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், 50% முதல் 150% சதவீத வரி உயர்வு என்பது மக்களை கடுமையாக பாதிக்கும் என்றார். குறிப்பாக தற்போது ரூ.6000/- வரியாக செலுத்த கூடிய மக்கள், இனி 150% வரி உயர்வால் ரூ.15000/- வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தார். வரி உயர்வு குறித்து மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தான்தோன்றிதனமாக திமுக செயல்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.