குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெரு தெருவாக திரியும் பேய் கதைகளை சிறுவயதில் நாம் கேட்டிருப்போம். அத்தகைய சூழலில் தான் தற்போது அதிரை நகராட்சி உள்ளது. வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் சேகரித்த குப்பையை டிராக்டரில் ஏற்றி வைத்துக்கொண்டு எங்கு கொட்டுவது என தெரியாமலும், எப்படி மறுசுழற்சி செய்வது என்று புரியாமலும் திக்குமுக்காடி நிற்கிறது அதிரை நகராட்சி.
வண்டிப்பேட்டை குப்பை கிடங்கு நிரம்பிய உடனே ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே ஈசிஆர் சாலையோரம் குப்பையை அதிரை நகராட்சி நிர்வாகம் கொட்டியது. இதனால் அங்கு மலைபோல் குப்பை தேங்கியதுடன் அவற்றை மறுசுழற்சி செய்யாமல் அவ்வபோது அக்னி பிரவேசம் செய்து தீ மூட்டி குப்பைகளின் அடர்த்தியை குறைப்பதாக கூறி அதன் தடிமத்தை அதிகரிக்க செய்துவிட்டனர். இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச பிரச்சனை உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டனர்.
நாளுக்குநாள் துர்நாற்றமும் குப்பையின் அளவும் வரம்பு மீறி எகிரியதால் பொறுத்துக்கொள்ள முடியாத ஏரிபுறக்கரை பொதுமக்கள், நகராட்சி குப்பை வண்டிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் தான் அதிரை ரயில் நிலையம் மற்றும் உப்பளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குப்பையை கொட்டும் அத்தியாயத்தை அதிரை நகராட்சி துவங்கியுள்ளது. இதனை கண்டு தற்போது மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.
இதனிடையே ரயில்வேக்கு சொந்தமான இடத்தை எந்தவித அனுமதியும் இன்றி ஜேசிபி இயந்திரத்தை கொண்டு குப்பை வண்டிகள் சென்று வர ஏதுவாக அதிரை நகராட்சி தயார் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகராட்சி அலுவலர்களை வரவழைத்தனர். அப்போது பேசிய ரயில்வே போலிசார், எந்த ஒரு பணியை ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வதற்கு முன்பு உரிய அனுமதியை ரயில்வேயிடம் பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
அதேசமயம் இவ்வாறு எந்தவித அனுமதியுமின்றி ரயில்வே இடத்தில் ஜே.சி.பி மூலம் பணியை நகராட்சி மேற்கொண்டதை சுட்டிக் காட்டிய அதிகாரிகள், பணியின் போது ரயிலுக்கான சிகினல் கேபிள் உள்ளிட்ட முக்கிய புதைவட கேபிள்கள் அருந்துவிட்டால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியுமா எனவும் எச்சரித்தனர்.
திடக்கழிவுகளை அகற்றுவதில் உரிய ஆலோசனை அனுபவமின்றி நகராட்சி நிர்வாகம் இவ்வாறு செயல்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.