அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு பகுதிகளாக பிரித்து செயல்பட திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மேற்கு நகர திமுக அஸ்லம் தலைமையிலும், கிழக்கு நகர திமுக இராம குணசேகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. அண்ணாத்துரை போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகள் மேற்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு தோறும் பிரச்சாரம், வாக்காளர் சந்திப்பு, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல் திட்டங்கள் போன்றவை வேகமெடுத்து வருகின்றன.
ஆனால், இதற்கு மாறாக கிழக்கு பகுதியில் இதுவரை குறிப்பிடத்தக்க தேர்தல் முன்னெடுப்புகள் எதுவும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இடையே அதிருப்தி நிலவி வருகிறது.
மேற்கு பகுதியில் நடைபெறும் செயல்பாடுகள் போன்று, கிழக்கு பகுதிக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், கிழக்கு பகுதியில் பணிகள் தொடங்காததற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால், தேர்தல் நேரத்தில் ஒருங்கிணைப்பு சவாலாக மாறக்கூடும் என்பதால், திமுக தலைமையினர் விரைந்து தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகிறது.








