காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் பலத்த போராட்டம் வெடித்தது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்றைய சென்னை கொல்கத்தா அணிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் நடக்கும் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா நேற்று மத்திய அரசிடம் மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை ஐபிஎல் தொடருக்கு வழங்குமாறு சந்தித்து கேட்டார்.
இந்நிலையில் ஆங்கில கட்சி ஊடகம் ஒன்று சென்னையில் நடைபெறும் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுதியான தகவல் இதுவரை வரவில்லை.