Home » கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

0 comment

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு, ஏப்ரல் 30-ம் தேதி மற்றும் மே 1-ம் தேதி ஆகிய இரண்டு நாள்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் – தென்மேற்கு வங்கக் கடலுக்கு இடையே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், “காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னையிலிருந்து 1,500 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நாளை மாறும். அந்தத் தாழ்வு மண்டலம், வரும் 27 அல்லது 28-ம் தேதி வாக்கில் புயலாக மாறும். அப்படிப் புயலாக மாறும்பட்சத்தில், அது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நோக்கி வர வாய்ப்பிருக்கிறது. இதனால், வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்றார். இந்தப் புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், `வட தமிழகம் மற்றும் இலங்கையின் தெற்குக் கடலோரப் பகுதிகளையொட்டி, ஃபனி புயல் வடமேற்காக ஏப்ரல் 30-ம் தேதி வாக்கில் நகரும். இதனால், ஏப்ரல் 28-ம் தேதி முதலே மழைப்பொழிவு தொடங்கி, அடுத்த சில நாள்களுக்குத் தீவிரமடையும். இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கைக் கடலோரப் பகுதிகளில், ஏப்ரல் 29-ம் தேதி மணிக்கு 90 – 100 கி.மீ வேகம் முதல் 115 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஏப்ரல் 30-ம் தேதி, காற்றின் வேகம் மணிக்கு 115 கி.மீ என்ற நிலையை எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் 25-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும்  புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 29-ம் தேதி மிகக் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter