நான் மண்புழு போல ஊர்ந்து சென்று தாம் முதலமைச்சராக விரும்பவில்லை. அப்படி ஒரு மானங்கெட்ட முதல்வர் பதவி எனக்கு தேவையில்லை, என்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் காட்டமாக பேசி உள்ளார்.
சில நாட்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த முதல்வர் பழனிசாமி, நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே வருடத்தில்தான் எம்எல்ஏ ஆனோம். இருவரும் அரசியலுக்கு வந்தது ஒரே காலகட்டம்தான்.
நான் முன்னேறிவிட்டேன். நான் முதல்வராகிவிட்டேன். ஆனால் அவரால் வளர முடியவில்லை, என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பேட்டி திமுகவினரை கொதிப்படைய செய்து இருந்தது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் இது குறித்து பேசினார்.
ஸ்டாலின் தனது பேச்சில், உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நிறுத்த விரும்பவில்லை. அது எங்களின் விருப்பமும் கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ய அதிமுக முயன்று வருகிறது. அதை தடுக்கவே வழக்கு தொடுத்து இருக்கிறோம்.
உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த அதிமுகவிற்கு பயம். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.
நான் இன்னும் முதல்வராகவில்லை என்று எடப்பாடி பழனிசாமி என்னை கிண்டல் செய்கிறார். ஆனால் அவர் எப்படி பதவி வாங்கினார். எப்படி முதல்வரானார் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு அவரைப்போல முதல்வராக தெரியாது, என்னால் அப்படி செய்யவும் முடியாது .
நான் மண்புழு போல ஊர்ந்து சென்று தாம் முதல்வராக விரும்பவில்லை. அப்படி ஒரு மானங்கெட்ட முதல்வர் பதவி எனக்கு தேவையில்லை, எனக்கு தமிழக மக்கள் முதல்வர் பதவியை கொடுப்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் காட்டமாக பேசினார்.