கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் வென்று தொகுதியைத் தக்க வைத்துள்ளது. கடந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய பாஜக சென்றமுறை வாங்கிய வாக்குகளையும், டெபாசிட்டையும் இம்முறை பறிகொடுத்து 4-வது இடத்துக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டம் வெங்கரா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 23,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காதரைத் தொடர்ந்து இடதுசாரி கூட்டணி வேட்பாளர் பசீர் 41,927 வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பெற்ற வாக்குகளை விட இம்முறை குறைவாகத்தான் கிடைத்திருக்கிறது.
கடந்த 2016 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 72,181 வாக்குகளையும் இடதுசாரி கூட்டணி 34,121 வாக்குகளையும் பெற்றது. அதேபோல் கடந்த முறை பாஜக 7,211 வாக்குகளைப் பெற்றது. இம்முறை வெங்கரா தொகுதியில் 5,728 வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது.
பாஜக டெபாசிட்டையும் பறிகொடுத்ததுடன் 4-வது இடத்துக்கும் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்விக்காகத்தான் அமித்ஷா, யோகி ஆதித்யநாத் களமிறக்கப்பட்டு யாத்திரை எல்லாம் நடத்தினார்களா? கேரளாவின்தான் அரசியல் படுகொலைகள் அதிகம் என பிரசாரத்தை பாஜக முன்னெடுத்ததா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த தேர்தலில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது எஸ்டிபிஐ. இத்தேர்தலில் எஸ்டிபிஐ 3-வது இடத்துக்கு முன்னேறியது.
தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் பாஜக எப்படியும் காலூன்றுவதற்கு பல கடுமையான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ஆனால் மக்கள் தொடர்ந்து பாஜகவை நிராகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.