ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அதிகமாக உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக ரீதியான சிறப்பான செயல்பாடுகளுக்காக பிரிப்பது வழக்கம்.
அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது. சுமார் 7 வட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவர வேண்டும் என்றாலே பல கிராம மக்கள் ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.
இதனால், சிறப்பான நிர்வாகத்தை வழங்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன.
இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்கக் கோரியுள்ள பார்த்திபனூர் ஆகிய வட்டங்களை இணைத்து கமுதி மாவட்டம் உருவாக்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதால், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து வரும் 25-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கமுதி மாவட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.