தஞ்சாவூர் உள்ளிட்ட தென்கடலோர மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அதிரையில் நேற்றையத்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூர்ந்து கிடக்கும் வடிகால்களை உடனடியாக தூர்வார நகராட்சி நிர்வாகத்திற்கு அவர், உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஜேசிபி-யை களத்தில் இறக்கிவிட்ட நகராட்சி ஆணையர் சசிகுமார், அனைத்து வடிகால்களையும் தூர்வாரி தடையின்றி மழைநீர் செல்வதை உறுதி செய்ய ஊழியர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இந்த பணிகளை மேஸ்திரி சந்தன செல்வம் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.