முன்புறம் வழக்கறிஞர் ஸ்டிக்கரும், பின்புறம் போலீஸ் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்ட சொகுசு காரில் கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர் உள்பட 3 நபர்களை ஒரத்தநாடு காவல் நிலைய போலீஸார் தென்னமநாடு பிரிவு சாலையில் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இதே கும்பலைச் சேர்ந்த மேலும் 2 கடத்தல்காரர்கள் 210 கிலோ கஞ்சாவுடன் மற்றொரு சொகுசு காரை புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம்கைகாட்டி என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சொசுகு கார்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீஸார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்டுக்கோட்டையில் இருந்து வேகமாக வந்த இன்னோவா காரை பாப்பாநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால் அக் கார் நிற்காமல் வேகமாக தப்பிச் சென்றுவிட்டது.
இதையடுத்து, அந்த சொகுசு காரை ஒரத்தநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன் மற்றும் போலீஸார் தென்னமநாடு பிரிவு சாலை அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது, காரின் ஓட்டுநர் மாட்டிக் கொண்ட நிலையில், காரில் அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் இறங்கி தப்பியோடினர். அவ்விருவரையும் போலீஸார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.