அதிரை நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய வார்டாக 2வது வார்டு கருதபடுகிறது. ஆனாலும் இந்த வார்டு சாலை மற்றும் வடிகால் வசதிகளின்றி தனி ஊராட்சி போல் காட்சி அளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் 2வது வார்டை தொடர்ந்து புறந்தள்ளி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது வார்டு மக்களின் நலனுக்காக எம்.எல்.ஏ, அமைச்சர்களை சந்தித்து சில வளர்ச்சி திட்டங்களை கவுன்சிலர் சித்தி ஆயிஷா எஸ்.எச்.அஸ்லம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நகராட்சி ஆணையரிடம் அந்த வார்டின் கவுன்சிலர் சித்தி ஆயிஷா எஸ்.எச்.அஸ்லம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய அதன் 2வது வார்டில் பெரும்பாலும் மணல் சாலைகள் மட்டுமே உள்ளன. கழிவுநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் இங்கு அறவேயில்லை. இதனால் 2வது வார்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக மழை பெய்யக்கூடிய சமயத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அங்குள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகின்றது. எனவே அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து உடனடியாக பணிகளை துவங்கி 2வது வார்டு மக்களின் குறைகளை தீர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், திமுக மாவட்ட சிறுபான்மை உரிமை பிரிவு தலைவர் அதிரை ஜமாலுதீன் உள்ளிட்டோர் ஆணையர் சித்ரா சோனியாவிடம் நேரில் வழங்கினர்.