தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சர்வதிகார போக்கு தலைத்தூக்கி தாண்டவமாடுவதாக அவ்வபோது செய்திகள் உலா வருகின்றன. இதனிடையே மருத்துவமனை கட்டுவதற்காக அரசிடம் இருந்து அர்டா அமைப்பு காசு கொடுத்து வாங்கிய இடத்தில் மருத்துவமனையை கட்டவிடாமல் கடந்த 40 ஆண்டுகளாக சிலர் இடையூறுகளை செய்து வரும் சூழலில், நகர்மன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தி அர்டாவுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க நகராட்சி நிர்வாகம் துணிந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் முன்னாள் சேர்மனும் திமுக மாவட்ட பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், தவறான செயலுக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் யாரும் துணை போக வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். நகராட்சி அலுவலகம், பேருந்துநிலையம், மின்வாரியம், பத்திர பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கான இடங்களை ஊரின் நன்மைக்காக மக்கள் வழங்கியதை சுட்டிக் காட்டிய அவர், தற்போது அந்த இடங்களை திருப்பி கேட்டால் அரசு இயந்திரத்தின் நிலை என்னவாகும் என்பதை நகராட்சி நிர்வாகம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே அதிரையின் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக கட்டப்பட இருக்கும் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய மிக பிரமாண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணியை தடுக்கும் படுபாதக செயலுக்கு அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் யாரும் துணை போக வேண்டாம் எனவும் எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
உலகில் சர்வதிகாரம் வென்றதாக வரலாறு இல்லை. மாறாக சர்வதிகார போக்கை கடைபிடித்தவர்கள் கடைசியில் இழி நிலைக்கு சென்றதையே வரலாறு சுட்டிக் காட்டுகிறது. அந்த இழி நிலை அதிரை நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வந்துவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.