தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெருகிவரும் மின் பயன்பாடு மற்றும் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை போக்கும் வகையில் 110kv துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த கா.அண்ணாதுரை, இப்பகுதி மக்களின் மின் தேவை குறித்து சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதனை ஏற்று கடந்த ஆண்டு நவம்பரில் அதிரையில் 110kv துணை மின் நிலைய கட்டுமானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் அந்த பணி விரைவில் முடிவடைந்து அக்டோபர் 25ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அதிரை 110kv துணை மின் நிலைய திட்டத்தை சட்டப்பேரவையில் வலியுறுத்தி அதற்கு புத்துயிர் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் நன்றியினை தெரிவித்து வருகின்றனர்.