பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் நாளை(டிசம்பர் 6) பட்டுக்கோட்டையில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக்கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நாளை டிசம்பர் 6 மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அப்துல் மாலிக் தலைமை வகிக்கிறார். தமுமுக தலைமை பிரதிநிதி காரைக்கால் அப்துல் ரஹீம், மமக மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளார்கள். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.
< அதிரை தக்வா பள்ளியில் இருந்து நாளை(டிசம்பர் 6) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
< மேலும் பெண்களுக்கும் தனி வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் நாளை நடைபெறும் மக்கள் திரள் ஆர்பாட்டத்திற்கான பிரச்சாரம் இன்று அதிரையன் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதிரையில் மொத்தம் 9 இடங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கான பிரச்சாரத்தில் அதிரை நகர தமுமுக நிர்வாகிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தனர்.