தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி அருகே உள்ள முஸ்லீம் சிறுபான்மை கல்வி நிருவனமான இமாம் ஷாஃபி பள்ளியை திமுக நகர செயலாளரும் நகர்மன்ற துணை தலைவருமான இராம.குணசேகரனின் தூண்டுதலின் பேரில் நகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக விடியற்காலையில் சீல் வைத்தது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பூட்டிய பள்ளியை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கேயே பொதுமக்கள் 5 நாட்களாக தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அமைதி பேச்சுவார்த்தை என்கிற பெயரில் தமக்கு ஆதரவானவர்களை மட்டும் அழைத்து தனியார் மண்டபத்தில் ஒரு கூட்டத்தை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அக்பர் அலி நடத்தி இருக்கிறார்.
இதுகுறித்த தகவல் அறிந்த அதிரையின் 60% இஸ்லாமியர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஜமாத்தான சம்சுல் இஸ்லாம் சங்கம், உடனடியாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் ஆர்.டி.ஓ நடத்திய அமைதிபேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்றும், அதனால் அதில் தங்களது சங்கம் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஒருதலைபட்சமாக செயல்படும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அக்பர் அலி குறித்து முதலமைச்சர் தனிபிரிவில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அக்பர் அலி குறித்து பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றுக்கொண்டிருக்கும் சூழலில் தற்போது ஒரு மிகபெரிய ஜமாத் நிர்வாகமே முதலமைச்சருக்கு புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.