RTE(RIGHTS TO EDUCATION ACT-2009) எனச் சொல்லப்படும் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம், L.K.G முதல் 8-ம் வகுப்பு வரை கல்வியைக் கட்டாயமாக எல்லா குழந்தைகளுக்கும் உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டமாகும்.
இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலமாக மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது அரசாணை.
கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ)தனியார் பள்ளிகளில் பின்தங்கிய பிரிவு , நலிவடைந்த (Weaker Section ) பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நுழைவு நிலை (எல்.கே.ஜி மற்றும் 1ஆம் வகுப்பு )வகுப்புகளில் இருந்து 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 25% இடங்களை ஒதுக்க படுகிறது. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது.
கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) அரசால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு பொருந்தாது , மேலும் நன்கொடை மற்றும் குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு நேர்காணல் இல்லாமல் சேர்க்கை செய்ய இத்திட்டம் வழிவகுக்கிறது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள் பின்வருமாறு..
1.நலிவடைந்த பிரிவு:
ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
2.பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அ). பின்தங்கிய வகுப்பு (BC)
ஆ). மிகவும் பின்தங்கிய வகுப்பு (MBC)
இ). பட்டியல் பழங்குடியினர் (ST)
ஈ). பட்டியல் இனத்தவர்கள்(SC)
3.பின்தங்கிய பிரிவு-சிறப்பு வகை கீழ் விண்ணப்பிக்கப்பட்ட குழந்தைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
1.அனாதை குழந்தைகள்
2.எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள்
3.திருநங்கைகள்
4.துப்புரவு தொழிலாளர்கள் குழந்தை
5.மாற்றுத்திறனாளி குழந்தை.
ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மேலும் சில முக்கிய தகுதிகள் உள்ளது. அவை பின்வருமாறு
விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை சேர்ந்த குழந்தையாக இருக்க வேண்டும்.
அக்கம்பக்கத்தில் ( வீட்டு முகவரியில் இருந்து 1 கிமீ சுற்றளவில்) உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பங்களை செலுத்த முடியும் .
ஒரு குழந்தை குறைந்தது 1 பள்ளி முதல் அதிகபட்சம் 5 பள்ளி வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் .
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மொத்தமாக பெறபட்டு பள்ளிகளில் ஏதாவது ஒரு தேதியில் குழுக்கள் முறையில் மாணர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை வழங்க விரும்பும் பெற்றோர்கள் மேலும் தகவலுக்கு அருகே உள்ள அரசு ஈ-சேவை மையத்தை அணுகவும்.