திருச்சி இனாம்குளத்தூரில் தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த இஜ்திமாவில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இஜ்திமாவில் பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர்.
இஜ்திமாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. அவசர ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல் ஐவேளைத் தொழுகையும் மாநாட்டு திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இஜ்திமா ஏற்பாட்டாளர்கள் மூலம் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இஜ்திமாவை முன்னிட்டு மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு தலைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.