உலக அளவில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி நோயான இதைக் குணப்படுத்த தற்போது ஒரு சில சிகிச்சை முறைகள், மருந்து மட்டுமே நடைமுறையில் உள்ளன. ஆனால், புற்றுநோய் பாதித்தால், அதை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது.
நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியைக் குறைப்பது மட்டுமே இப்போதுள்ள சிகிச்சை முறையில் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த `ஆக்சலரேடட் எவால்யூஷன் பயோடெக்னாலஜிஸ் லிமிட்டெட்’ (AEBi – Accelerated Evolution Biotechnologies Ltd) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவக்குழுவினர் தற்போது புதிய மருந்து கண்டுபிடித்துள்ளனர். இது புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“புற்றுநோய் செல்களை முற்றிலும் அழிக்கும் வகையில் இந்த மருந்து மூன்று கட்டங்களாகச் செயல்படும். இதற்கு `மியூடட்டோ சிகிச்சை’ (Multi Target Toxin Treatment) என்று பெயர். உடலில் புற்றுநோய் பாதித்த பகுதிகளைச் சென்றடையும் இந்த மருந்து தனது பணியைச் செய்யும். அப்போது பிற பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அதனால் புற்றுநோய் 100 சதவிகிதம் குணமாகும். வேறு சிகிச்சைகள் பலனளிக்காவிட்டால் இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இதற்கான காப்புரிமையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இந்த மருந்து விற்பனைக்கு வரும். அதன் பிறகு புற்றுநோய் பாதிப்பே இருக்காது. அதுவரை இந்த உலகம் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் மொரட்.