சென்னையில் வடகிழக்கு பருவமழை படுதீவிரமடைந்துள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.
சென்னை புறநகரில் விடிய விடிய பெய்த மழையால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை தாம்பரத்தில் 6 மணிநேரத்தில் 14 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு சாலைகள் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. தாம்பரம்-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-நங்கநல்லூர் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் வருகிற 7ம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.