தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை திமுக கூட்டணி 152 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 81 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் 19 ஆயிரத்து 82 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். ‘ஐட்ரீம்’ மூர்த்தி 49 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஜெயக்குமார் 30 ஆயிரத்து 61 வாக்குகளே பெற்றிருந்தார். இதன்மூலம் 5 முறை ராயபுரத்தில் எம்எல்ஏ-வாக இருந்த ஜெயக்குமாரை வீழ்த்தி திமுக வேட்பாளர் ‘ஐட்ரீம்’ மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.