நமது நாட்டில் அரசு ஆவணங்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்குள் பொது மக்கள் படாதபாடு படுவது இயல்பான நிகழ்வு. குறிப்பாக, அடையாளத்தைக் குறிக்கும் பெயர் போன்றவற்றில் பிழைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தமே அபத்தமாக மாறிவிடும்.
அப்படி ஒரு அபத்தம் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு நிகழ்ந்து கடுப்பேற்றியுள்ளது.மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி தத்தா. இவரின் பெயர் ரேஷன் கார்டில் தவறுதலாக பதிவாகியுள்ளது.இவர் தனது பெயரில் உள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த நிலையில், இரு முறையும் அது சரி செய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. மூன்றாவது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதிலாக ஸ்ரீகந்தி குத்தா என்று மாறி தவறாக வந்துள்ளது. இது அவரை கடும் விரக்தியில் ஆளாக்கியுள்ளது. காரணம் இந்தியில் குத்தா என்பதற்கு நாய் என்று பொருள்.
"இதனால் கடுப்பான ஸ்ரீகந்தி, அப்பகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்த போது அவரது காரை மறித்து தனது கோரிக்கையை வித்தியாசமாக ஆத்திரத்துடன் முறையிட்டுள்ளார். தனது புகார் மனுவை அவரிடம் நீட்டி பல நொடிகள் நாய் போல குரைத்து காட்டி புகார் அளித்தார் தத்தா."
ஒரு நிமிடம் ஏதும் புரியாமல் திகைத்து போன அதிகாரி பின்னர் கோரிக்கையை வாங்கி படித்து சரி செய்வது தருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினார். தத்தா நாய் போல குரைத்து காட்டி மனு தரும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக தத்தா, “நான் இதுவரை மூன்று முறை தவறை திருத்த விண்ணப்பித்து வெறுத்துவிட்டேன். அதனால் தான் அதிகாரி முன் நாய் போல குரைத்து காட்டினேன். எங்களை போன்ற எளிய மக்கள் எத்தனை முறை தான் வேலையை விட்டுவிட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்க முடியும்” என்று கவலையுடன் தெரிவித்தார் .