தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
நேற்றும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் காங்கிரஸ், எஸ்டிபிஐ, மஜக, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதனையடுத்து இரண்டாவது கட்சியாக திமுகவில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின்- பேரா. ஜவாஹிருல்லா முன்னிலையில் தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் 2 தொகுதிளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல் கட்சியாக திமுக உடனான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்திடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் – பேரா. காதர் மொய்தீன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி முஸ்லிம் லீக் தனிச் சின்னத்தில் 2 தொகுதியில் போட்டியிடும்.












