தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு நேற்று(26/05/2018) சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இயற்கை பேரழிவுகள்(பேரிடர்) காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு மற்றும் அவர்களுக்கு உணவு போன்ற உதவிகள் செய்யவும், மருத்துவ உதவிகள் செய்யவும் தமிழக அரசு கடலோர பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்களை அமைத்துள்ளது.
தஞ்சை மாவட்ட அளவில் இதற்கு முன்னர் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் இருக்கையில், பல்வேறு வசதிகளுடன் புதிதாக 14 மையங்கள் கட்டப்பட்டுள்ளது.
இயற்கை சீரழிவு காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து மையங்களும் தயார் நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு அவர்கள் பட்டுக்கோட்டை வட்டப்பகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் கரையூர் தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், ராஜாமடம் கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பல்வேறு பகுதியில் உள்ள புயல்பாதுகாப்பு மையங்களில் தற்பொழுது ஆய்வு மேற்கொண்டார்.