திருச்சி: காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்….
திருச்சி மாவட்டம் தில்லைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில ஊடகப்பிரிவு மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது… இதில் மாநிலச் செயலாளர் முகமது ரபிக், மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி, மாநில துணைத் தலைவர் கோவைசெய்யது, துணை பொதுச் செயலாளர் உஸ்மான்கான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வாஹித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹைதர் அலி,இந்தியா தற்போது கருப்பு தேசமாக மாறி வருவதாகவும், ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத் தக்கது என்றும் கூறினார். மத்திய அரசின் ஜிஎஸ்டியால் பல நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளதாக கூறிய அவர், பார்லே ஜி பிஸ்கெட் நிறுவனம் வர்த்தகம் பாதிப்பு இருப்பதாக கூறி 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்…
இவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே காஷ்மீர் பிரிப்பு, என்ஐஏ சட்டம், முத்தலாக் போன்றவற்றை நிறைவேற்றுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் ராகுல் காந்தியை காஷ்மீருக்குள் அனுமதிக்க அம்மாநில நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருவது கண்டனத்திற்குறிது என்றும் ராகுல் காந்திக்கு காஷ்மீர் மாநிலம் செல்ல முழு உரிமை உள்ளது, எனவே அவர் செல்வதை தடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்….