அதிராம்பட்டினம் நீர்நிலை அறக்கட்டளையின் முயற்சியாலும், இன்னும் சில அமைப்புகளின் முயற்சியாலும் அதிராம்பட்டினத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, அதிரையில் உள்ள குளங்களை நிரப்பும் வகையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ராஜாமடம் வாய்க்கால் வழியாக CMP வாய்க்காலுக்கு பொதுப்பணித்துறையால் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு குளம் கூட நிறையாத நிலையில், இரண்டே நாட்களில் செல்லிக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் அதிரைக்கு வரவேண்டிய தண்ணீர் தடைபட்டு, குளங்கள் வற்றி காணப்படுகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நீர்நிலை அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 15க்கும் மேற்பட்ட நீர்நிலை அறக்கட்டளை அமைப்பினர் நேற்று வியாழக்கிழமை காலை மனு அளித்தனர்.
அம்மனுவில், அதிராம்பட்டினத்தில் உள்ள குளங்களுக்கு சென்று கொண்டிருந்த தண்ணீரை, சேண்டாக்கோட்டையில் உள்ள ஷட்டர் மூலம் செல்லிக்குறிச்சி ஏரிக்கு சில விஷமிகள் திருப்பிவிட்டுள்ளனர். இதனால் அதிரை குளங்களுக்கு வரவேண்டிய தண்ணீர் வராமல், குளங்கள் அனைத்தும் வற்றிக்காணப்படுகிறது. எனவே சேண்டாக்கோட்டையில் இருந்து செல்லிக்குறிச்சி ஏரிக்கு தண்ணீர் திறக்க பயன்படுத்தப்படும் ஷட்டரை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அதனை மூடி, சாவியை லஸ்கர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்த மனுவின் நகலை பட்டுக்கோட்டை துணை ஆட்சியர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோருக்கும் வழங்கியுள்ளனர்.