மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேரளா சட்டசபை தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கையே நாசமாகும் என்பதுதான் எதிர்ப்புக்கு காரணமாகும். கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்களை கைவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை நிராகரித்து அண்மையில் டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய விவசாய சட்டங்களின் நகல்களை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சட்டசபையிலேயே கிழித்தும் எறிந்தார்.
இதேபாணியில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரளா சட்டசபையை கூட்டுவதற்கு முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஆனால் கேரள ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வந்தார். இந்த நிலையில் இன்று கேரளா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.