பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமானத்வரி துறை அறிவித்துள்ளது.
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாத பலரும் இன்று முயன்றனர். இதன் காரணமாக அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பலரும் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. அதன்படி இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அதற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செயலற்றதாக ஆகிவிடும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.