மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன். 7 வயதாகும் இந்தச் சிறுவன், தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுகுறித்து சிறுவன் ஹரிஸ் வர்மன் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சைக்கிள் வாங்கச் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பினேன். கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் அறிந்து போது, நான் சேமித்து வைத்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப அப்பாவிடம் கேட்டேன். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தாத்தாவிற்குச் சேமித்து வைத்த பணத்தை அனுப்பியதாக மழலை குரலில் கூறினான்.
மகனின் செயல் குறித்து சிறுவனின் தந்தை இளங்கோவன் கூறுகையில், ஹரிஸ்வரதன் செய்திகளில் வரும் கொரோனா செய்திகளைப் பார்த்தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவலாம் என என்னிடம் கேட்டார். பின் சைக்கிள் வாங்க வைத்திருந்த முழு பணத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு தெரிவித்தாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது சேமிப்பை முழுவதுமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி நேற்று மாலை ஹரிஸ்வர்மனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சைக்கிள் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
அப்போது அச்சிறுவனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வழியாகப் பேசினார். அச்சிறுவனிடம் பெயர், படிப்பு உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார். பின்னர் சைக்கிளை எடுத்துட்டு இப்போது வெளியே போகாத, கொரோனா இருக்கு, கொரோனா முடிந்ததும் பத்திரமா சைக்கிள் ஓட்டு என அட்வைசும் செய்தார்.