அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றபோதும், மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் அவசர கதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வார்டுகள் மறுவரையரையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எல்லைகளை தீர்மானித்தத்திலும் குளறுபடிகள் நடந்துள்ளன. கடந்த நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஹல்வா துண்டுபோல திமுகவுக்கு விழுந்தது. பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுக-வை மக்கள் ஆதரித்தனர். ஆனால் இப்போது அந்த சங்கத்தையே அரசியல் காய்நகர்த்தல் மூலம் சீண்டி பார்க்கின்றனர் உள்ளூர் புள்ளிகள்.
இந்நிலையில், வார்டு மறுவரையரை குளறுபடிகளை கண்டித்து வரும் 19ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சம்சுல் இஸ்லாம் சங்கம் முடிவு செய்துள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு நீதிக்கு தோள்கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.