Home » அதிரை- மன்னை ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி வேண்டி எம்.எல்.ஏ விடம் கோரிக்கை..!!

அதிரை- மன்னை ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி வேண்டி எம்.எல்.ஏ விடம் கோரிக்கை..!!

0 comment

தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னை விரைவு ரயிலில் பயணம் செல்ல மன்னார்குடி இரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து வசதி செய்துதர பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் தலைவர்.என்.ஜெயராமன் , செயலர் வ.விவேகானந்தம், செயற்குழு உறுப்பினர் டி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இன்று 22.02.2018 அன்று காலை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை மனுவில்”
மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு இரயில் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் இரவு10.25 மணிக்கு மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு திருவாரூர் வழியாக சென்னை செல்லும் என்றும், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக அதிகாலை 4.45 மணிக்கு மன்னார்குடி வந்து சேரும் என்றும் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

மேற்படி மன்னை விரைவு இரயிலில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், வடசேரி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள், பயணம் செய்கின்றனர். அவர்கள் அனைவரும் மேற்கூறிய இரயிலில் பயணிக்க மன்னார்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி தனியார் வாகனங்களிலும் , கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நகர பேருந்துகளிலும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.இதனால் அதிக பொருட்களை எடுத்து செல்பவர்கள், பெண்கள், வயது முதிந்தோர், உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர்.

எனவே அதிராம்பட்டினத்தில் இருந்து துவரங்குறிச்சி, மதுக்கூர் வழியாக மன்னார்குடி இரயில் நிலையம் வரை ஒரு அரசு பேருந்தும், பட்டுக்கோட்டையில் இருந்து ஆலத்தூர், வடசேரி வழியாக மன்னார்குடி இரயில் நிலையம் வரையிலும் ஒரு அரசு பேருந்தினை மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மன்னார்குடியில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரத்திற்கு ஏற்றாற் போல் பேருந்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்” எனகோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் நகல் கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கும் , பட்டுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கும் அனுப்பப்பட்டது.

மனுவினை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அரசு போக்குவரத்துக்கழக மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு பேருந்து வசதி செய்துதர கேட்டுக்கொண்டார்கள்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter