காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் 19வது முதலமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
அதன் பின்னர், இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூடியது. ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை டிசம்பர் 3-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, உத்தவ் தாக்கரே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் உத்தவ் தாக்கரேவை 169 எம்எல்ஏ-க்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜகவின் 105 எம்எல்ஏ-க்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். உத்தவ் தாக்கரே அரசிற்கு எதிராக எந்த ஒரு எம்எல்ஏ-வும் வாக்களிக்கவில்லை. மேலும் 4 எம்எல்ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணிகளோடு சேர்ந்து ஏற்கனவே உத்தவ் தாக்கரேவிற்கு 154 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.