கொரோனா பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் மீது 94 வழக்குகள் பதிவு!
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக சித்தரித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்திகள் பரப்பட்டு வந்தநிலையில், இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒரு சில புகார்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தகைய செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்படவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை ஊடகங்கள் சரியான முறையில் பின்பற்றவும் உத்தரவிடக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக நீதியரசர்கள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணையில், மாநில அரசு இந்த புகார்கள் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று (மே.04) இந்த வழக்கு நீதியரசர்கள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதேபோன்ற வழக்கு நீதியரசர் சத்யநாராயணன் அமர்வு முன்பு தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி வழக்கை தள்ளுபடி செய்ய கோரினார். மத்திய அரசு வழக்கறிஞர் இதுதொடர்பான வேறு ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்.
இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழ.ராஜா முகமது, மாநில அரசு வழக்கறிஞர் தள்ளுபடி செய்ய கோரி சுட்டிக்காட்டிய வழக்கின் கோரிக்கையும், இந்த வழக்கின் கோரிக்கையும் வெவ்வேறானது. மேலும், இந்த வழக்கின் விசாரணை துவங்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்ய கோருவதில் முகாந்திரம் இல்லை என சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து அவதூறு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, 94 புகார்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை எழுத்துப்பூர்வமாக மனுதாரருக்கும், நீதிமன்றத்துக்கும் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் அந்த அறிக்கை தொடர்பில் ஆட்சேபம் இருந்தால் மனுவாக தாக்கல் செய்யலாம் என தெரிவித்து, வழக்கு விசாரணையை மே 18க்கு ஒத்திவைத்தார்.