கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இறைத்தூதரை இழிவாக பேசி வரும் கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கல்யாணராமனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இறுதியாக தஞ்சை DSP பாரதிராஜாவிடம், கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட தவ்தீத் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.















