காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திவடாத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நீரை பெற்றுத்தராத ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடி பணியை தொடங்கவும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே விவசாயிகளோடு வியாபாரிகளும் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து விவசாய சங்கங்கள், திமுகவின் விவசாய அணி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.