பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அதிராம்பட்டினத்தில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6, பாசிச எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐமுமுக தலைமை கழக பேச்சாளர்கள் திருச்சி ஜாகிர் மற்றும் அதிரை ஷேக் உமர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது பேசிய அதிரை ஷேக் உமர், சட்டத்தை மதிக்கும் எங்களால் தான் இது மாதிரியான ஜனநாயக வழியில் நின்று போராட முடியும் என்றார். பின்னர் பேசிய திருச்சி ஜாகிர், பாபர் மசூதி இடிப்பிற்கான நோக்கங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கத்தக்கது. குறிப்பாக பாபர் மசூதி இடிப்பதற்கு டிசம்பர் 6ஐ ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை விளக்கி பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை, பட்டுக்கோட்டை நகர ஐமுமுக நிர்வாகிகள், ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.