தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- கன்னியாகுமரி – சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையர்
- திருநெல்வேலி – இரா. செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
- தூத்துக்குடி – பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை
- தென்காசி – சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை.
மேலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த கீழ்க்கண்ட அதிகாரிகள் இந்த 4 மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- கோ. பிரகாஷ் – கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
- பா. பொன்னையா – இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை
- கிரண் குராலா – இயக்குனர், பேரூராட்சிகள் துறை
- சு. சிவராசு – இயக்குனர், நகராட்சி நிர்வாகம்
உதவி எண்கள் :
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070
வாட்ஸ் அப் எண் – 94458 69848
மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் – 1077